கன்னியாகுமரியில் அவதிப்படும் சுற்றுலா பயணிகள்


     தென்னிந்தியாவின் முனைப்பகுதியில் முக்கடல் சங்கமிக்கும் அழகான சுற்றுலாத் தலம் கன்னியாகுமரி. சுற்றுலாவிற்கு பெயர் பெற்ற இந்த தலத்தில் பயணிகளுக்கான வசதிகள் கேள்விக்குறியாகவே இருக்கின்றன.
    மூன்று கடலின் சங்கமத்தோடு சூரிய உதயத்தையும் அஸ்தமனத்தையும் காண கன்னியாகுமரியில் எந்த நேரமும் கூட்டம் இருக்கும். படகு சவாரியும் விவேகானந்தர் பாறையும், அண்மைக்காலமாக திருவள்ளுவர் சிலையும் சுற்றுலாப்பயணிகளின் வருகையால் பெரும்பாலும் விடுமுறைக்காலங்களில் களைகட்டி இருக்கும். குறிப்பாக கோடை சீசனில் அதிக அளவு பயணிகள் வரும் சூழலில், அவர்களுக்கான வசதிகள் குறைவாகவே இருக்கின்றன.. இதை எடுத்துக்காட்டும் விதமாக பூட்டியே இருக்கும் உடை மாற்றும் அறை, திறக்கப்படாமல் இருக்கும் கழிப்பறை என சரியான அடிப்படை வசதிகள் இல்லாததால் கடலில் குளிப்பதைச் சுற்றுலா பயணிகள் தவிர்க்கின்றனர்.
    இது போதாதென்று பிளாஸ்டிக் பொருட்கள் ஆங்காங்கே இறைந்து கிடப்பதாலும், கடற்கரை எங்கும் பிளாஸ்டிக் குப்பைகளும், கழிவுகளுமாக சிதறிக் கிடப்பது சர்வ சாதாரணமாக இருக்கிறது.. மேடும் பள்ளமுமாக கடலுக்குச் நீராடச் செல்லும் பாதை செப்பனிடப் படாமல் இருக்கிறது.
   காலம் காலமாக கன்னியாகுமரி கடல் பகுதி பெரும் வரவேற்பு பெற்றுவரும் சுற்றுலா தலமாக இருக்கும் நிலையில், பயணிகளுக்கான வசதிகள், சுற்றுலா பகுதிகளின் மோசமான பராமரிப்பு போன்றவை குறித்து விளக்கம் கேட்க மாவட்ட நிர்வாகத்தை அணுக முயன்றபோது சரியான பதில் கிடைக்கவில்லை. கன்னியாகுமரி மாவட்ட சுற்றுலா துறை அதிகாரிகளும் சரியான விளக்கத்தை தர மறுத்துவிட்டனர்.